தாய்லாந்து நாட்டில் மந்திரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது ரத்து; ஐரோப்பிய நாடுகளில் பக்க விளைவுகள் எதிரொலி


தாய்லாந்து நாட்டில் மந்திரிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது ரத்து; ஐரோப்பிய நாடுகளில் பக்க விளைவுகள் எதிரொலி
x
தினத்தந்தி 12 March 2021 7:12 PM GMT (Updated: 12 March 2021 7:12 PM GMT)

அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கூட்டாக சேர்ந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை, தாய்லாந்து நாட்டில் பிரதமர் பிரயுத் சான் ஓச்சாவும், மந்திரிகளும் நேற்று போட்டுக்கொள்ள இருந்தனர்.

ஆனால் இந்த தடுப்பூசியால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியானதால், அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை திடீரென ரத்துசெய்து விட்டனர். இதை அந்த நாட்டின் சுகாதார அமைச்சக உயர் அதிகாரி அபிசாட் வாசிராபான் உறுதி செய்தார்.

ஆஸ்திரியாவில் நேற்று முன்தினம் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி போட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ஒரு பெண் ரத்த நாளங்களில் ரத்தம் உறைந்ததால் இறந்ததையடுத்து அந்த தடுப்பூசியின் பயன்பாடு அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று டென்மார்க், எஸ்டோனியா, ஐஸ்லாந்து, இத்தாலி, லாத்வியா, லிதுவேனியா, லக்சம்பெர்க், நார்வே ஆகிய நாடுகளிலும் இந்த தடுப்பூசி போடுகிறபோது ரத்தம் உறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்ததால் அதன் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. இது உலகமெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

Next Story