2020 ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிக்க ரஷிய அதிபர் புதின் முயற்சி? அமெரிக்க உளவுத்துறை தகவலால் பரபரப்பு


2020 ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிக்க ரஷிய அதிபர் புதின் முயற்சி? அமெரிக்க உளவுத்துறை தகவலால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 March 2021 7:51 PM GMT (Updated: 17 March 2021 7:51 PM GMT)

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரஷிய அதிபர் புதின் டிரம்புக்கு ஆதரவாகவும் ஜோ பைடனை தோற்கடிக்கவும் முயற்சி செய்ததாக அமெரிக்க அரசின் உளவுத்துறை தற்போது தெரிவித்துள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ரஷிய அதிபர் புதின் டிரம்புக்கு ஆதரவாகவும் ஜோ பைடனை தோற்கடிக்கவும் முயற்சி செய்ததாக அமெரிக்க அரசின் உளவுத்துறை தற்போது தெரிவித்துள்ளது.

2020 தேர்தலுக்கான வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் குறித்து தேசிய புலனாய்வு இயக்குனர் அலுவலகம் விசாரணை நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.

ஜோ பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளை டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும், அவரது நிர்வாகமும் முயற்சித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள ஜோ பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீதான நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில் ஜோ பைடனையும் சேர்க்க ரஷிய அரசின் உதவியுடன் டிரம்ப் ஆதரவாளர்கள் சதி திட்டம் தீட்டியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

அதேபோல் டிரம்ப் 2-வது முறையாக ஜனாதிபதி ஆவதை தடுக்கும் நோக்கில் ஈரான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயற்சித்ததாகவும் உளவுத் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதே சமயம் இத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வெளிநாட்டு சக்தியும் தலையிட்டதற்கான அறிகுறிகள் இல்லை என உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஜனாதிபதி தேர்தல் விவகாரத்தில் தங்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. 

Next Story