புதின் ஒரு கொலையாளி , அமெரிக்க தேர்தல் தலையீடுக்கு தக்க விலை கொடுப்பார்- அமெரிக்க ஜனாதிபதி ஆவேசம்


புதின் ஒரு கொலையாளி , அமெரிக்க தேர்தல் தலையீடுக்கு  தக்க விலை கொடுப்பார்- அமெரிக்க ஜனாதிபதி ஆவேசம்
x
தினத்தந்தி 18 March 2021 6:00 AM GMT (Updated: 18 March 2021 6:00 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க முயன்றவர் என்றும் கொலையாளி என்றும் ரசிய அதிபரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விமர்சித்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடனை தோற்கடிக்க ரஷிய அதிபர் புதின் முயற்சித்தார் என அமெரிக்க அரசின் உளவுத் துறை அறிக்கையில் பரபரப்பான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு இயக்குனர் அவ்ரில் ஹைன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அதிகாரிகள் மற்றும் டிரம்பிற்கு நெருக்கமான மற்றவர்கள் மூலம் பிரசாரத்தில் பைடன் குறித்து தவறான தகவல்களை ரஷியா புகுத்த முயன்றது.

பைடன் மீது தவறான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களை, டிரம்ப் ஆதரவாளர்கள் மூலம் பரப்ப புதினும் அவரது நிர்வாகமும் முயன்றுள்ளது. குறிப்பாக டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞரான ரூடி ஜியுலானிக்கு அதில் முக்கிய பங்கு இருந்தது.

உக்ரைன் நிறுவனத்துடன் வர்த்தக உறவு வைத்துள்ள பைடனின் மகன் ஹன்டர் பைடன் மீது உள்ள நிரூபிக்கப்படாத மோசடி வழக்கில், பைடனையும் சேர்க்க , டிரம்ப் ஆதரவாளர்கள் ரஷிய அரசின் உதவியுடன் திட்டமிட்டனர்.

அமெரிக்காவிற்குள் குழப்பத்தையும் முரண்பாடுகளையும் உருவாக்குவதற்கான ரஷியாவின் முயற்சிகள் இது ஆகும்.

ஈரானும் தேர்தலில் தலையிட முயன்றதாக அறிக்கை கண்டறிந்துள்ளது, ஆனால் எந்தவொரு வெளிநாட்டு சக்தியும் - ரஷியா கூட - வாக்கு மொத்தத்தை மாற்றவோ அல்லது தேர்தல் உள்கட்டமைப்பைத் தாக்கவோ முயலவில்லை என அதில் கூறப்பட்டு உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிக்க முயன்றவர் என்றும் கொலையாளி என்றும் ரசிய அதிபரை அமெரிக்க ஜனாதிபதி  ஜோ பைடன் விமர்சித்ததை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளது.

ஜோ பைடன் அளித்த பேட்டி ஒன்றில் ரஷியாவில் எதிர்க்கட்சித் தலைவரையே விஷம் வைத்துக் கொல்ல புதின் முயற்சித்தார். அவர் ஒரு கொலையாளி  அமெரிக்க தேர்தல் தலையீடுக்கு  தக்க விலை கொடுப்பார் என கூறி உள்ளார். 

இதன் எதிரொலியாக அமெரிக்காவுக்கான தனது தூதர் அனடோலி ஆன்டனோவை மாஸ்கோ திரும்புமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Next Story