ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் 19 தலீபான் பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 21 March 2021 8:05 PM GMT (Updated: 21 March 2021 8:05 PM GMT)

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. முடிவில்லாமல் நீளும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர இருதரப்பும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கத்தார் தலைநகர் தோகாவில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. ராணுவ வீரர்களையும் போலீசாரையும் குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதே சமயம் அவர்களை ஒடுக்கும் விதமாக ராணுவமும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்தநிலையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் தலீபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்த போர் விமானங்கள் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதியில் குண்டு மழை பொழிந்தன. இதில் தலீபான் பயங்கரவாதிகள் 19 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். அத்துடன் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன. 

Next Story