இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் இங்கிலாந்தில் கைது - இந்தியாவுக்கு நாடு கடத்தல்


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் இங்கிலாந்தில் கைது - இந்தியாவுக்கு நாடு கடத்தல்
x
தினத்தந்தி 23 March 2021 2:21 AM GMT (Updated: 23 March 2021 2:21 AM GMT)

இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

லண்டன்,

இங்கிலாந்து குடியுரிமை பெற்று அந்நாட்டில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிஷான் சிங் (வயது 38) என்பவர் சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர் மீது கடந்த 2016-17-ம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை வினியோகித்ததாக வழக்கு தொடரப்பட்டது.

இந்தியா அளித்த வேண்டுகோளின்படி கடந்த 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை நாடு கடத்துவதற்கான வழக்கை விசாரித்த லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு, கிஷான் சிங்கை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இவை அனைத்தும் முடிவடைந்ததை தொடர்ந்து இங்கிலாந்து போலீஸ் அதிகாரிகள் கிஷான் சிங்கை, இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் கிஷான் சிங் டெல்லி அழைத்து வரப்பட்டுள்ளார்.

Next Story