மியான்மருடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அறிவிப்பு


File Photo: AFP
x
File Photo: AFP
தினத்தந்தி 29 March 2021 10:24 PM GMT (Updated: 29 March 2021 10:24 PM GMT)

மியான்மரில் ராணுவத்தின் அடக்குமுறைக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.

வாஷிங்டன்,

மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. 

கடந்த சனிக்கிழமை ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே நாளில் 114 பேர் கொல்லப்பட்டனர்.  இதுவரை மியான்மர் ராணுவத்தால் போராட்டக்காரர்கள் 459- பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

ராணுவ ஆட்சி தொடங்கியதற்கு பிறகு ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது இதுவே முதல் முறை. இதனால் இது உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து சர்வதேச நாடுகள் மியான்மர் ராணுவத்தை வன்மையாக கண்டித்தன. 

இந்த நிலையில்,  மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசங்காம் அமையும் வரை அந்நாட்டுடனான வர்த்தக உறவுகளை நிறுத்திவைப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் வர்த்தக  பிரதிநிதி கதேரின் டை  தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.  2013- ஆம் ஆண்டு மியான்மருடன் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு வர்த்தக ஒப்பந்தங்கள்  நிறுத்தி வைக்கப்படுவதாக கதேரின் டை தெரிவித்துள்ளார். 


Next Story