வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்தாலும் இந்தியா செல்லலாம்; இந்திய தூதரகம் அறிவிப்பு


வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்தாலும் இந்தியா செல்லலாம்; இந்திய தூதரகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 April 2021 11:05 PM GMT (Updated: 1 April 2021 11:05 PM GMT)

வெளிநாட்டு வாழ் இந்திய குடியுரிமை(ஓ.சி.ஐ) அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண்கள் இருந்தாலும் இனிமேல் இந்தியாவுக்கு செல்லலாம் என இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓ.சி.ஐ. அடையாள அட்டை

இந்தியாவைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருந்தால் அவர்கள் இந்தியாவுக்கு செல்ல உதவியாக வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர் என்பதை குறிக்கும் ஓ.சி.ஐ. எனப்படும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.இந்த அடையாள அட்டையானது விண்ணப்பிக்கும் போது எந்த பாஸ்போர்ட் எண் உள்ளதோ அந்த எண்ணை இணைத்து இந்த ஆவணம் வழங்கப்படுகிறது. எனினும் வெளிநாட்டைச் சேர்ந்த இந்தியர் என்ற அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் புதிய பாஸ்போர்ட் எடுக்கும் போது அந்த எண் அடையாள அட்டையில் இருப்பதில்லை. இதனால் ஒரு சில விமான நிலையங்களில் உள்ள குடியுரிமைத்துறை அதிகாரிகள் இந்தியாவுக்கு செல்ல அனுமதிப்பதில்லை.

கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவில் இருந்து ஓ.சி.ஐ. அடையாள அட்டை பெற்ற இந்தியர் தனது தந்தையின் இறுதிச் சடங்குக்காக துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக செல்வதற்காக வந்தார். அவரது அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண் இருந்ததால் அவர் இந்தியாவுக்கு பயணத்தை தொடர அனுமதிக்கப்படவில்லை. அதன் பின்னர் இந்திய துணை தூதரகம் உதவியின் மூலம் அவர் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த ஆண்டு இறுதி வரை...

இதன் காரணமாக இனிமேல் ஓ.சி.ஐ. அடையாள அட்டையில் பழைய பாஸ்போர்ட் எண்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இதற்காக பழைய பாஸ்போர்ட்களை கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயமில்லை.இதன் மூலம் ஏற்படும் சிரமங்களை போக்கிக் கொள்ள தங்களது பழைய ஓ.சி.ஐ. அடையாள அட்டைகளை சமர்ப்பித்து தற்போது இருக்கும் பாஸ்போர்ட்டுடன் இணைத்து புதிய ஓ.சி.ஐ. அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனை இந்த ஆண்டு இறுதிவரை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் இந்தியாவுக்கு பயணம் செய்வதில் எந்தவிதமான சிரமமும் இருக்காது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story