மியான்மரில் ராணுவத்தால் நடத்தப்படும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம்


மியான்மரில் ராணுவத்தால் நடத்தப்படும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம்
x
தினத்தந்தி 3 April 2021 3:01 AM GMT (Updated: 3 April 2021 3:01 AM GMT)

மியான்மரில் நிகழ்த்தப்படும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுத்த அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்டு இருக்கும் மியான்மர் ராணுவம், ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளது. 

ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து  போராட்டத்தில் ஈடுபடுபவர்களை ராணுவம் இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகிறது. இதனால் ஏற்பட்ட வன்முறையில் 500 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டதாக சர்வதேச அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், மியான்மரில் நடைபெறும் வன்முறைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இதுதொடா்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்ச்சி கூறியதாவது:-

மியான்மரில் நிகழ்த்தப்படும் எந்தவொரு வன்முறைக்கு இந்தியா கண்டனம்  தெரிவித்துக்கொள்கிறது. அங்கு சட்டத்தின் ஆட்சி நிலைத்து ஜனநாயகம் மீண்டும் தழைக்க வேண்டும். அந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இந்தியா வலியுறுத்தியுள்ளது. 

தற்போது அங்கு நிலவும் சூழலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை கொண்ட ஆசியான் அமைப்பின் நடவடிக்கைகள் உள்பட அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் சமமான, ஆக்கபூா்வமான முறையில் பங்களிக்கும் முயற்சியாக சா்வதேச நாடுகளுடனும், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலுடனும் இந்தியா தொடா்பில் இருந்து வருகிறது” என்றார். 

Next Story