துபாயில் முன்பதிவு அடிப்படையில் கொரோனா தடுப்பூசி - சுகாதார ஆணையம் அறிவிப்பு


துபாயில் முன்பதிவு அடிப்படையில் கொரோனா தடுப்பூசி - சுகாதார ஆணையம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2021 5:58 PM GMT (Updated: 3 April 2021 5:58 PM GMT)

துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் முன்பதிவின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

துபாய்,

துபாய் சுகாதார ஆணையத்தின் சார்பில் முன்பதிவின் அடிப்படையில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதில் தற்போது கூடுதல் பிரிவினருக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அனைத்து அமீரகத்தை சேர்ந்த குடிமக்கள், துபாய் குடியிருப்பு விசா பெற்றுள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், துபாயில் வசித்து வரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், துபாய் குடியிருப்பு விசா பெற்ற மாற்றுத்திறனாளிகள், துபாய் விசா பெற்ற இதய நோய்களையுடையவர்கள், அமீரக அடையாள அட்டை வைத்துள்ள வளைகுடா நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் ஆகியோர் முன்பதிவு செய்து தற்போது கொரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார ஆணையத்தின் சார்பில், பைசர்-பயோ என்டெக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு போடப்படுகிறது. அதேபோல ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனக்கா 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் போடப்படுகிறது.

இந்த தடுப்பூசிகளை சுகாதார ஆணையத்தின் வாடிக்கையாளர் சேவை மைய எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து போட்டுக்கொள்ளலாம் என்றும் சுகாதார ஆணையத்தில் முன்பதிவு செய்துகொண்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story