100வது நாள் முடிவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள்; அமெரிக்க அதிபர் பைடன்
பதவியேற்று 100வது நாள் முடிவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் பேசும்பொழுது, வருகிற 19ந்தேதிக்குள் 18 வயது பூர்த்தியான ஒவ்வொருவரும் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள தகுதியானவர்களாக ஆகி விடுவார்கள் என கூறியுள்ளார்.
இனி குழப்பம் விளைவிக்கும் விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி வருகிற 19ந்தேதிக்கு பின்னர் வயது வந்தவர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள தகுதியானவர்கள் ஆகின்றனர். அதற்கு முன் நாட்டிலுள்ள மூத்த குடிமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என பைடன் வலியுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து பைடன் கூறும்பொழுது, தனது 75 நாட்கள் பதவி காலத்தில், 15 கோடி டோஸ்கள் வரை தடுப்பூசி போடப்பட்டு உள்ளன. இதுவரை 75 சதவீத மூத்த குடிமக்களுக்கு ஒரு டோஸ் போடப்பட்டு உள்ளது.
தன்னுடைய 100வது நாள் பதவி காலம் முடிவில் 20 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என எதிர்நோக்கி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
எனினும், அமெரிக்காவில் கொரோனாவின் புதிய வகைகளுடன் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என எச்சரிக்கை விடுத்த பைடன், வயது வந்த அனைவரும் முழு அளவில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதற்கு பல மாதங்கள் எடுத்து கொள்ளும் என கூறியுள்ளார்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story