ஸ்பெய்னில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிப்பு


ஸ்பெய்னில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிப்பு
x
தினத்தந்தி 8 April 2021 2:03 AM GMT (Updated: 8 April 2021 2:03 AM GMT)

ஸ்பெய்ன் நாட்டில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேட்ரிட்,

ஆகஸ்போர்டு மற்றும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பூசி இன்று உலக அளவில் பல நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை இந்தியாவின் சீரம் நிறுவனமும் கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து நாடு முழுவதும் போடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியால் ஐரோப்பிய நாடுகளில் பலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்த ஐரோப்பிய யூனியனின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, சுமார் 34 லட்சம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டதில் 169 பேருக்கு இரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டதாக பதிவு செய்துள்ளது.

மேலும் 60 வயதுக்கு கீழ் உள்ள பெண்களுக்கே இந்த பிரச்சினை அதிக அளவில் ஏற்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. இதனை தொடர்ந்து அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அந்த வகையில் ஸ்பெய்ன் நாட்டில், இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் கரோலினா டரியாஸ், ஏற்கனவே அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டவர்களுக்கு 2வது டோஸ் வழங்கப்படுமா? என்பது குறித்து இன்று மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story