நீரிழிவு நோய்க்கு வாய் வழியே உட்கொள்ளும் இன்சுலின் மருந்து; அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை


நீரிழிவு நோய்க்கு வாய் வழியே உட்கொள்ளும்  இன்சுலின் மருந்து; அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி சாதனை
x
தினத்தந்தி 8 April 2021 4:01 AM GMT (Updated: 8 April 2021 4:01 AM GMT)

அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழகத்தின் சார்பில் நீரிழிவு நோய்க்கு வாய்வழியே உட்கொள்ளும் இன்சுலின் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி நியூயார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியின் விஞ்ஞானி பாரா பென்யட்டு மற்றும் வேதியியல் துறையின் திட்ட தலைவர் அலி டிரபோல்சி ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாய்வழியே மருந்தாக உட்கொள்ளும் இன்சுலின்

தற்போது வேதியியல் ஆராய்ச்சியில் நீரிழிவு நோய்க்கு ஒரு வெற்றிகரமான தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் மருந்து ஊசி மூலம் தோலுக்கடியில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பாரம்பரிய முறையில் தொடர்ந்து ஊசிகளை உடலில் செலுத்துவதால் பலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு மாற்றாக தற்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையின் சார்பில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவில் வாய்வழியே உட்கொள்ளும் இன்சுலின் மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இன்சுலினை நேரடியாக அப்படியே உட்கொள்ள முடியாது. எனவே அதனை நானோ (மிக நுண்ணிய) துகள்களாக மாற்றி அதனை சுற்றி காஸ்ட்ரோ ரெசிஸ்டன்ட் இமைன் என்ற துகளுடன் கேவேலன்ட் ஆர்கானிக் பிரேம்ஒர்க் நானோ துகள்களை இணைத்து உறைபோல போர்த்தப்படுகிறது.

விரைவில் தீர்வளிக்கிறது

இவ்வாறு நுட்பமாக அந்த இன்சுலினின் நானோ துகள்களை கரிம ரசாயனங்களை மேற்பூச்சாக கொண்டு உருவாக்கப்பட்ட மருந்தை அப்படியே மனிதர்கள் உட்கொள்ள முடியும். வயிற்றில் சென்றவுடன் பாதுகாப்பாக மேலுறை கரைந்து இன்சுலின் வெளிப்படுகிறது. நானோ துகள்களை விழுங்கிய இரண்டு மணி நேரத்திற்குள் சர்க்கரையின் அளவு உடலில் சமநிலைப்படுத்தப்பட்டது.

இந்த மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (எப்.டி.ஏ) அங்கீகாரம் அளித்துள்ளது. மற்ற தொழில்நுட்பங்களை பார்க்கும்போது இது மனிதர்களின் உடலுக்கு எந்த விதமான ஒவ்வாமை மற்றும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த மருந்து நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு கொடையாக அமையும். எளிதில் உட்கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் விரைவில் தீர்வளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story