ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் தலீபான் கவர்னர் உட்பட 22 பயங்கரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் வான் தாக்குதலில் தலீபான் கவர்னர் உட்பட 22 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 10 April 2021 9:09 PM GMT (Updated: 10 April 2021 9:09 PM GMT)

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.

ஆப்கானிஸ்தானின் பல்வேறு நகரங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலீபான் பயங்கரவாதிகள் அங்கு தங்களுக்கென தனி ஆட்சி நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள படாக்சான்‌ மாகாணத்தில் உள்ள வர்துஜ் நகரம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நகரின் கவர்னராக தலீபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த காரி ஹைதர் என்பவர் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வர்துஜ் நகரில் தலீபான் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து ராணுவம் வான் தாக்குதலை நடத்தியது.

இதில் தலீபான் கவர்னர் காரி ஹைதர் மற்றும் அவருடன் இருந்த 21 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 23 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். அதோடு இந்த வான் தாக்குதலில் தலீபான் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக்கிடங்குகள் உள்ளிட்டவை நிர்மூலமாக்கப்பட்டன.

இதனிடையே மத்திய மாகாணமான கஜினி மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் 13 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆப்கானிஸ்தான் அரசும், தலீபான் பயங்கரவாத அமைப்பும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதும், இதில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படாத சூழலில் நாட்டில் வன்முறை அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story