கொரோனா கால இழப்பை ஈடுகட்ட ‘இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும்’ - சர்வதேச நிதியம் சொல்கிறது


கொரோனா கால இழப்பை ஈடுகட்ட ‘இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும்’ - சர்வதேச நிதியம் சொல்கிறது
x
தினத்தந்தி 11 April 2021 1:53 AM GMT (Updated: 11 April 2021 1:53 AM GMT)

கொரோனா கால இழப்பை ஈடுகட்ட இந்தியா வேகமான வளர்ச்சி பெற வேண்டும் என்று சர்வதேச நிதியம் கூறியுள்ளது.

வாஷிங்டன், 

சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பின் துணை தலைமை பொருளாதார நிபுணர் பேட்யா கோவா புரூக்ஸ், இந்திய செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் கொரோனாவால் உற்பத்தி சீர்குலைந்தது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக குறைந்தது. தற்போது இந்த 2021-22-ம் நிதி ஆண்டில் 12.5 சதவீத வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், சரிவில் இருந்து இந்தியா மீண்டு வருவதை பார்த்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். முதல் காலாண்டில் தொடர்ந்து மீட்பு உள்ளது.

ஆனால் புதிய வகை கொரோனா வைரஸ்களால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு, உள்ளூர் ஊரடங்குகள் போடப்பட்டுள்ளன. இது மீட்புக்கான நேரத்தில் ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கொள்கை பதில்களை நாங்கள் பார்த்துள்ளோம். அவை பல பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நாங்கள் நிதி ஆதரவை பார்த்திருக்கிறோம். பண தளர்த்தலை கண்டிருக்கிறோம். பணப்புழக்கம் அதிகரித்தல் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பார்த்துள்ளோம்.

பட்ஜெட்டின்போது இந்தியா அறிவித்த நடவடிக்கைகளை சர்வதேச நிதியம் வரவேற்கிறது. சர்வதேச நிதியத்தின் அறிவுறுத்தல்படி பல நடவடிக்கைகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன.

இப்போதும் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதிச்சலுகை வழங்கினால் அது உதவியாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு இந்த நிதிச்சலுகை வழங்கப்படவேண்டும். குறிப்பாக குடும்பங்களுக்கு வழங்கப்பட வேண்டும். மிகவும் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இந்தச் சலுகையை தரலாம்.

கொரோனா காலத்தில் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவதற்கு இந்தியா வேகமான வளர்ச்சியை பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story