இந்தோனேசியாவில் கடுமையான நிலநடுக்கம்; 6 பேர் பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 6 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் காயமடைந்து உள்ளார்.
ஜகார்தா,
மத்திய இந்தோனேசியாவில் அமைந்த கிழக்கு ஜாவா மாகாணத்தின் கடற்கரையோர பகுதியருகே நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவானது. இந்நிலநடுக்கம் மலாங் நகருக்கு தென்மேற்கே 45 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்தது.
எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலச்சரிவு ஏற்படக்கூடிய பாறைகள் அமைந்த பகுதிகள் அருகே வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கத்திற்கு 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என தேசிய பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்ட செய்தியை அடிப்படையாக கொண்டு அன்டாரா செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதுதவிர ஒருவர் காயமடைந்து உள்ளார். நிலநடுக்கத்திற்கு 300க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.
ஆனால், இந்நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவாகி உள்ளது என இந்தோனேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2018ம் ஆண்டு 7.5 என்ற அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 4,300 பேர் உயிரிழந்தனர்.
Related Tags :
Next Story