பெருவில் பஸ் சாலையில் கவிழ்ந்து 20 பேர் பலி


பெருவில் பஸ் சாலையில் கவிழ்ந்து 20 பேர் பலி
x
தினத்தந்தி 13 April 2021 6:48 PM GMT (Updated: 13 April 2021 6:48 PM GMT)

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இதையொட்டி தலைநகர் லிமாவில் வசித்து வரும் பரோபாம்பா மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 40 பேர் பஸ்சை வாடகைக்கு அமர்த்தி தங்கள் மாகாணத்துக்கு சென்று ஓட்டு போட்டனர்.அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அவர்கள் அனைவரும் அதே பஸ்சில் பரோபாம்பா மாகாணத்தில் இருந்து லிமா நகருக்கு புறப்பட்டனர்.

இந்த பஸ் பரோபாம்பா மாகாணத்தில் உள்ள அன்காஷ் நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் தறிகெட்டு ஓடிய பஸ் சாலையின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது‌. இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.‌

ஜனநாயக கடமையை ஆற்றி விட்டு ஊருக்கு திரும்பியவர்கள் பஸ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அந்த நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.‌

 


Next Story