மியான்மர்: கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றிய ராணுவம்


மியான்மர்: கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல்களை அரங்கேற்றிய ராணுவம்
x
தினத்தந்தி 20 April 2021 5:06 AM GMT (Updated: 20 April 2021 5:06 AM GMT)

மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

நைபிடா, 

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது. போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. 

ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் இதுவரை 737 பேர் கொல்லப்பட்டுள்ளதாக மியான்மரில் செயல்பட்டுவரும் ஏ.ஏ.பி.பி. என்ற மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3 ஆயிரத்து 229 பேர் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை மியான்மர் ராணுவம் கைது செய்து வருகிறது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை கொடூரமான தாக்குதல் மற்றும் சித்தரவதைகளுக்கு உள்ளாக்கும் கொடூர செயலில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களில் 6 இளைஞர்களின் புகைப்படங்களை மியான்மர் ராணுவத்தின் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது.  

கைது செய்யப்பட்டவர்களில் 4 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் ராணுவத்தால் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். அந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் முகங்கள் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்டுவர்களுக்கு இது தான் நிலைமை என எச்சரிக்கும் வகையில் மியான்மர் ராணுவம் இந்த இளைஞர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.



மியான்மர் ராணுவத்தால் நடத்தப்பட்ட மனிதத்தன்மையற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் புகைப்படங்கள் வெளியாகி அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து, ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் திரளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவத்தின் தாக்குதலால் முக அமைப்பே மாறியுள்ள அந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் பழைய புகைப்படங்களையும், தாக்குதலுக்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.



Next Story