கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுப்பு; பரிசீலிப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் உறுதி


கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுப்பு; பரிசீலிப்பதாக ஜோ பைடன் நிர்வாகம் உறுதி
x
தினத்தந்தி 20 April 2021 5:03 PM GMT (Updated: 20 April 2021 5:03 PM GMT)

கொரோனா தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்க நிறுவனங்கள் மறுத்து வருகின்றன. இப்பிரச்சினையை பரிசீலிப்பதாக ஜோ பைடன் அரசு உறுதி அளித்துள்ளது.

ஏற்றுமதி செய்ய மறுப்பு

இந்தியாவில் கடந்த ஒன்றரை மாதமாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 2 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்துள்ளது. தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய மறுத்து வருகின்றன. இதுதான் தட்டுப்பாடுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஜூலை 4-ந் தேதிக்குள் தடுப்பூசி போட அமெரிக்கா இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே, பைசர், மாடர்னா போன்ற அமெரிக்க நிறுவனங்கள், தடுப்பூசி உற்பத்தியை தீவிரப்படுத்தி உள்ளன. இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெரிதும் தேவைப்படும் மூலப்பொருட்களை வினியோகிக்கும் நிறுவனங்கள், அமெரிக்க தேவைக்கு மட்டுமே வினியோகித்து வருகின்றன.

உள்நாட்டுக்கு முன்னுரிமை

இதற்கு கடந்த 1950-ம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டு வரப்பட்ட பாதுகாப்பு உற்பத்தி சட்டம்தான் காரணம். தேச பாதுகாப்புக்கு தேவையான மூலப்பொருட்களை உள்நாட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து வினியோகிக்க வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. அதன்படி, தடுப்பூசி, முழு கவச உடைகள் உற்பத்தியில் உள்நாட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால், மூலப்பொருட்களை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க நிறுவனங்கள் மறுக்கின்றன.

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா முதல் முறையாக இப்பிரச்சினையை அமெரிக்க அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார். அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித்சிங் சந்துவும் அமெரிக்க அதிகாரிகளிடம் இதுபற்றி பேசினார். இருப்பினும், எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பரிசீலிக்க உறுதி

இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம், இந்த பிரச்சினையை உரிய முறையில் பரிசீலிப்பதாக இந்தியாவிடம் உறுதி அளித்துள்ளது. ஜோ பைடன் நிர்வாகம் மேலும் கூறியதாவது:-

இந்தியாவின் மருந்து தேவையை அமெரிக்கா உணர்ந்துள்ளது. மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. இதற்கு உள்நாட்டு சட்டம்தான் காரணம். உள்நாட்டு தேவைக்கு இச்சட்டம் முன்னுரிமை அளிக்கிறது. இருப்பினும், இப்பிரச்சினையை பரிசீலிக்கிறோம்.

இவ்வாறு கூறியுள்ளது.

ஆனால், தடுப்பூசி மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை நீக்க வேண்டும் என்ற சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோரிக்கை குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை பத்திரிகை தொடர்பு செயலாளர் ஜென் பைசாகி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டார்.

இந்தியாவுக்கு செல்ல வேண்டாம்

இதற்கிடையே, இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களை அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளது. நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. இதுகுறித்து நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. எனவே, அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கண்டிப்பாக இந்தியாவுக்கு செல்ல வேண்டுமென்றால், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். கூட்டமான இடங்களை தவிர்க்க வேண்டும். மற்றவர்களிடம் இருந்து 6 அடி தள்ளியே இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையும் இந்தியா செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. உலக அளவில் அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அடுத்த இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. இருப்பினும், இந்தியாவின் கொரோனா சூழ்நிலையை அமெரிக்கா விமர்சித்துள்ளது.

 


Next Story