ஆப்கானிஸ்தானில் 5 நாள் வன்முறையில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு


ஆப்கானிஸ்தானில் 5 நாள் வன்முறையில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 21 April 2021 12:27 AM GMT (Updated: 21 April 2021 12:27 AM GMT)

ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் கொட்டம் இன்னும் அடங்கவில்லை. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை, மற்றொரு பக்கம் வன்முறை என்பது அவர்களின் வழக்கமாக உள்ளது.

காபூல், 

இந்த நிலையில் அங்கு பரா, பர்வான், நர்கர்ஹார், காந்தஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த 5 நாட்களில் நடந்த வன்முறை சம்பவங்களில் அப்பாவி மக்கள் 39 பேர் கொன்று குவிக்கப்பட்டிருப்பதாக ஆப்கானிஸ்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த வன்செயல்களில் இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவார்கள் எனவும் அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான உயிர்ப்பலிகள் குண்டு வெடிப்பு மற்றும் தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல்களில் ஏற்பட்டவை என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. தலீபான்கள் தங்களுடைய தாக்குதல்களை நியாயப்படுத்துகின்றனர்.

இதையொட்டி அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகித் கூறும்போது, “ரமலான் அல்லது பிற மாதங்களில் போர் இருப்பது ஒரு பொருட்டல்ல. ரமலான் மாதத்தில் அரசு படைகள் மீது தாக்குதலை நிறுத்துமாறு கூற மாட்டேன். சண்டை நிறுத்தத்துக்கு இன்னும் அதிக நேரமும், ஒப்பந்தங்களும் தேவை. எங்கள் நியாயமான குறிக்கோள்கள் போரின்றி பெறப்படும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் தங்கள் போராளிகள், அப்பாவி பொதுமக்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்த மாட்டார்கள் என தெரிவித்தார்.

Next Story