கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள இந்திய அரசுக்கு உதவ தயார்: சீனா அறிவிப்பு


கொரோனா 2வது அலையை எதிர்கொள்ள இந்திய அரசுக்கு உதவ தயார்:  சீனா அறிவிப்பு
x
தினத்தந்தி 24 April 2021 12:29 AM GMT (Updated: 24 April 2021 12:29 AM GMT)

கொரோனாவின் 2வது அலையை எதிர்கொள்ள இந்திய அரசுக்கும், மக்களுக்கும் உதவ தயாராக இருக்கிறோம் என சீனா தெரிவித்து உள்ளது.

பெய்ஜிங்,

இந்தியாவில் 3.32 லட்சம் பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.  இதுவரை இல்லாத வகையில் நாட்டில் பதிவான இந்த எண்ணிக்கை உலக அளவிலும் ஒரு நாளில் மிக அதிகம் ஆகும்.  இதேபோன்று ஒரே நாளில் 2,263 பேர் உயிரிழந்து உள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.  இதேபோன்று மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய தேவையும் உள்ளது என அரசிடம் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து உள்ளதற்கு பல உலக நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.  இந்நிலையில், இதுபற்றி சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி ஜாவோ லிஜியான் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வரும் இந்திய அரசுக்கும் மற்றும் அந்நாட்டு மக்களுக்கும், சீன அரசு மற்றும் அதன் மக்கள் உறுதியான ஆதரவு வழங்குகிறார்கள்.

இந்தியாவின் தேவைக்கு ஏற்ப ஆதரவும், உதவியும் வழங்க சீனா தயாராகவே உள்ளது.  இந்த விசயத்தில் இந்திய தரப்புடன் நாங்கள் தொடர்பிலேயே இருக்கிறோம்.  இந்திய மக்கள் இந்த பாதிப்பில் இருந்து மிக விரைவில் வெளிவருவார்கள் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.


Next Story