இந்தியாவில் இருந்து கிளம்புவது நல்லது; குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்
இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவுக்கு நல்லது என தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.
வாஷிங்டன்,
இந்தியாவில் நடப்பு ஆண்டு ஏப்ரல் தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் புதிய உச்சம் தொட்டு வருகின்றன. கடந்த 5ந்தேதி ஒரே நாளில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 249 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது.
இதன்பின்னர் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கும் கூடுதலான பாதிப்புகளை பதிவு செய்து வருகிறது. நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை கவனத்தில் கொண்டு அமெரிக்க அரசு தனது நாட்டு குடிமக்களுக்கு பயண கால எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதன்படி, இந்தியாவுக்கு அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்ய வேண்டாம். இந்தியாவில் இருந்து எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ அவ்வளவு நல்லது என தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் மருத்துவ உதவி பெறுவது கடுமையாக உள்ளது. வரைமுறைக்கு உட்பட்டே சிகிச்சை கிடைத்து வருகிறது. அதனால் கிடைக்கும் போக்குவரத்து வசதிகளை கொண்டு உடனடியாக இந்தியாவை விட்டு கிளம்பும்படி அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவை தினந்தோறும் செயல்படுகிறது. பாரீஸ் மற்றும் பிராங்பர்ட் வழியேயும் விமானங்கள் அமெரிக்கா வந்தடைகின்றன என டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story