இந்தியாவுக்கு தேவையான மருந்து பொருட்களை அனுப்பி வைக்க வங்காளதேசம் முடிவு


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 30 April 2021 2:13 AM GMT (Updated: 30 April 2021 2:13 AM GMT)

ரெம்டெசிவிர் உள்பட பிற மருந்து பொருட்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு வங்காளதேசம் அனுப்பி வைக்கிறது.

டாக்கா,

நாட்டில் கொரோனாவின் முதல் அலையை விட 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.  முதல் அலையில் அமெரிக்கா உள்பட பல உலக நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்தன.  இதனால், அந்த நாடுகளுக்கு இந்தியா மருந்து சப்ளை செய்து உதவியது.  இதற்கு ஐ.நா.சபையும் பாராட்டு தெரிவித்து இருந்தது.

நடப்பு ஆண்டு தொடக்கத்தில் பாதிப்பு விகிதம் சரிவை நோக்கி சென்றது ஆறுதல் அளித்தது.  ஆனால், உலக அளவில் மக்கள் தொகையில் 2வது இடத்திலுள்ள இந்தியாவில் பாதிப்பின் தீவிரம் நாள்தோறும் உச்சமடைந்து வருகிறது.  இதனால், பல உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவுடனான விமான சேவைக்கு தற்காலிக தடை விதித்துள்ளன.

நாட்டில், நேற்று ஒரே நாளில் 3,79,257 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை உயர்ந்து வரும் சூழலில், அவர்களுக்கு தேவையான படுக்கைகள், ஆக்சிஜன், மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவை போதிய அளவுக்கு மக்களுக்கு கிடைக்காத சூழல் உள்ளது.

தொடர்ந்து உலக அளவில் அதிக பாதிப்புகளை சந்தித்து வரும் இந்தியாவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, நியூசிலாந்து, ரஷ்யா, சிங்கப்பூர் மற்றும் பல நாடுகள் கொரோனாவுக்கு எதிராக போராட இந்தியாவுக்கு உதவ தயாராக இருக்கிறோம் என உறுதியளித்து இருந்தன.

இதேபோன்று நாட்டில் ரெம்டெசிவிர் உள்பட அவசரகால தேவைக்கான மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பிற மருந்து பொருட்களை அடுத்த வாரம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வங்காளதேச அரசு முடிவு செய்துள்ளது.

இதுபற்றி அந்நாட்டு வெளியுறவு செயலாளர் மசூத் பின் மோமென் கூறும்பொழுது, இந்தியா எங்களிடம் ரெம்டெசிவிர் மருந்துகளை கேட்டிருந்தது.  அதனை அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து இருக்கிறோம் என கூறியுள்ளார்.

இவற்றில் வைரசுக்கு எதிரான 10 ஆயிரம் மருந்து குப்பிகள், 30 ஆயிரம் பி.பி.இ. உபகரணங்கள் மற்றும் ஜிங்க், கால்சியம், வைட்டமின் சி மற்றும் பிற தேவையான சத்துகள் நிறைந்த மருந்துகள் ஆகியவை ஆயிரக்கணக்கில் அனுப்பி வைக்கப்படும்.


Next Story