கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பயங்கர மோதல் - 31 பேர் பலி


கிர்கிஸ்தான் - தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பயங்கர மோதல் - 31 பேர் பலி
x

கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிஷ்கி,

ஒருங்கிணைந்த சோவியத் யூனியன் பிளவடைந்த பின்னர் 1991 ஆம் ஆண்டு கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய இரு நாடுகள் சுதந்திரம் பெற்றன. மத்திய ஆசியாவில் அமைந்துள்ள இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஓடும் ஆறு தொடர்பாக பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வந்தது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேவும் எல்லை பிரச்சினையும் தீர்க்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், நீர்நிலையில் கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டை ஏற்பட்டது. அந்த சண்டை தற்போது இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சனைக்கு வழிவகுத்தது.

இரு நாடுகளை சேர்ந்த வீரர்களும் மோதலில் ஈடுபட்டனர். சர்ச்சைக்குரிய கிர்கிஸ்தான் நாட்டின் பேட்கன் பகுதியில் இன்று மோதல் வெடித்தது. இரு நாடுகளின் வீரர்களும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடு தாக்குதல்களும் அரங்கேறியது.

இந்த மோதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக கிர்கிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும்,150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மோதலில் தஜிகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் தெரிவிக்கப்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் வசித்துவந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடம் நோக்கி இடம்பெயரத்தொடங்கியுள்ளனர்.

இரு நாட்டு எல்லையின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதல் போருக்கு வழிவகுக்காமல் தடுக்கும் வகையில் இருநாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயற்சி மேற்கொண்டு வருகின்றன.  

Next Story