4-ந் தேதி முதல் அமல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வர தடை - யார், யாருக்கு விலக்கு?


4-ந் தேதி முதல் அமல் இந்தியாவில் இருந்து அமெரிக்கா வர தடை - யார், யாருக்கு விலக்கு?
x
தினத்தந்தி 1 May 2021 6:43 PM GMT (Updated: 1 May 2021 6:43 PM GMT)

இந்தியாவில் இருந்து யாரும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 4-ந் தேதி இது அமலுக்கு வருகிறது. அதே நேரத்தில் சில பிரிவினருக்கு விலக்கும் தரப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் பாடாய்ப்படுத்தியது.

ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, இந்தியாவை வீறு கொண்டு தாக்கி வருவது உலக நாடுகளை அதிர வைத்து வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையோ 2 லட்சத்தை தாண்டி விட்டது.

இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட பல உலக நாடுகள் இந்தியாவுக்கு பயண கட்டுப்பாடு விதித்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியர்கள் 4-ந் தேதி முதல் அமெரிக்கா வருவதற்கு ஜோ பைடன் நிர்வாகம் அதிரடியாக தடை விதித்துள்ளளது.

ஜோ பைடன் பிறப்பித்துள்ள இந்த அதிரடி உத்தரவு காரணமாக அமெரிக்க குடிமக்கள் அல்லாத யாரும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு செல்ல முடியாது.

அதே நேரத்தில் சில விலக்குகளையும் அமெரிக்கா வழங்கி உள்ளது.

* அமெரிக்க குடிமக்கள் அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள், தங்கள் வாழ்க்கைத்துணையுடன் அமெரிக்கா வரலாம்.

* இலையுதிர் காலத்தில் ஆய்வுகளைத் தொடங்க விரும்பும் மாணவர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், கொரோனா பாதித்த நாடுகளுக்கு முக்கியமான உள்கட்டமைப்பு ஆதரவை வழங்கும் நபர்களுக்கு அமெரிக்கா வர விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

* இந்தியா, பிரேசில், சீனா, ஈரான், தென் ஆப்பிரிக்காவில் உள்ள தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் விலக்கு உண்டு.

இந்தியாவுக்கு பயண கட்டுப்பாடு விதித்து ஜோ பைடன் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி எம்.பி.க்கள் டிம் புர்ச்செட், ஜோடி ஆரிங்டன் எதிர்ப்பு ெதரிவித்து சாடி உள்ளனர். ஆனால் இந்திய வம்சாவளி எம்.பி. ரோகன்னா ஆதரித்துள்ளார்.

Next Story