ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறி 9 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்து சிதறி 9 பேர் பலி
x
தினத்தந்தி 2 May 2021 5:38 PM GMT (Updated: 2 May 2021 5:38 PM GMT)

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் வடக்குப் பகுதியில் உள்ள சாகர் தரா மாவட்டத்தில்‌ பெட்ரோல் நிலையம் ஒன்று உள்ளது.

இந்த பெட்ரோல் நிலையத்துக்கு அருகே ஏராளமான பெட்ரோல் டேங்கர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பெட்ரோல் டேங்கர் லாரிகளில் ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. இதில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த பெட்ரோல் டேங்கர் லாரிகளுக்கும் பரவி ஒவ்வொன்றாக வெடித்து சிதறியது.இப்படி 50-க்கும் மேற்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரிகள் வெடித்துச் சிதறி முற்றிலுமாக உருக்குலைந்து போயின. மேலும் இந்த கோர சம்பவத்தில் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், அங்குள்ள கடைகள் மற்றும் வீடுகள் உள்ளிட்டவையும் தீக்கிரையாகின.

இது குறித்து தகவல் கிடைத்ததும் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் பல மணி நேரம் போராடி தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் இந்த கோர சம்பவத்தில் 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 14 பேர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்துச் சிதறியது விபத்தா அல்லது பயங்கரவாதிகளின் சதியா என்பது தெளிவாகவில்லை. இது குறித்து காபூல் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

 


Next Story