துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த சுகாதார பராமரிப்பிற்கான அங்கீகாரம்; சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் சான்றிதழ் வழங்கியது


துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த சுகாதார பராமரிப்பிற்கான அங்கீகாரம்; சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் சான்றிதழ் வழங்கியது
x
தினத்தந்தி 3 May 2021 8:07 PM GMT (Updated: 3 May 2021 8:07 PM GMT)

துபாய் சர்வதேச விமான நிலையத்தின் சிறப்பான கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் அங்கீகாரம் அளித்து சான்றிதழை வழங்கியுள்ளது.

இது குறித்து துபாய் அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா முன் தடுப்பு பணிகள்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் பன்னாட்டு விமானங்கள் அன்றாடம் வந்து செல்கின்றன. உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் துபாய் முக்கியமானது ஆகும். இதில் பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் அதிக அளவில் வருகை தருவதால் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக விமான நிலையங்களை சுற்றி தூய்மையாக பராமரிப்பது, தொற்று நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகள், கொரோனா முன் தடுப்பு பணிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கதாகும்.

தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள்

இதில் சர்வதேச விமான நிலையங்கள் கவுன்சில் சார்பில் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் அடையாளம் காணப்பட்டது. அதில் இதுவரை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் 40 லட்சம் பேருக்கு பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கு 12 ஆயிரத்து 430 லிட்டர் கிருமி நாசினி திரவமானது விமான நிலையத்தை சுகாதாரமாக பராமரிக்க பயன்படுத்தப்படுகிறது. விமான நிலையத்தில் பணியாற்றும் 1 லட்சம் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகத்தில் 34 தெர்மல் ஸ்கேனிங் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சுகாதார பராமரிப்பிற்கான அங்கீகாரம்

மேலும் 775 பகுதிகளில் சானிட் டைசரை பயன்படுத்துவதற்கு வசதியாக டிஸ்பென்சர் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. தும்மல், இருமல் போன்ற உடல் திரவங்கள் மூலம் தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு வசதியாக 1,275 அக்ரலிக் என்ற பொருளால் தயாரிக்கப்பட்ட கண்ணாடி போன்ற தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள 86 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே மேற்கண்ட சிறப்பம்சங்களுடன் சிறப்பாக கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தி வரும் காரணத்தால் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு சிறந்த சுகாதார பராமரிப்பிற்கான அங்கீகாரம் அளித்து சான்றிதழை வழங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story