இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இலங்கையிலும் பரவியது


இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா இலங்கையிலும் பரவியது
x
தினத்தந்தி 9 May 2021 1:49 AM GMT (Updated: 9 May 2021 1:49 AM GMT)

இந்தியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா (பி.1.617) வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு, 

சீனாவின் உகானில் தோன்றிய கொரோனா வைரஸ் பின்னர் பல்வேறு வகைகளில் மாறுபாடு அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருவது கண்டறியப்பட்டது. குறிப்பாக இங்கிலாந்து மாறுபாடு (பி.1.1.7), டென்மார்க்-ஐரோப்பிய-மத்திய கிழக்கு மாறுபாடு (பி.1.428), இலங்கை மாறுபாடு (பி.1.411), நைஜீரிய மாறுபாடு (பி.1.525), தென்ஆப்பிரிக்க மாறுபாடு (பி.1.351) என பல்வேறு வகையான மாறுபாடுகள் கண்டறியப்பட்டு இருக்கின்றன.

இதில் முக்கியமாக இந்தியாவிலும் புதிய வகையில் மாறுபாடு அடைந்த தொற்று கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்திய மாறுபாடு வைரஸ் (பி.1.617) என அறியப்படும் இந்த தொற்று தங்கள் நாடுகளுக்குள் நுழைந்து விடாமல் பல்வேறு நாடுகளும் எச்சரிக்கையாக இருந்து வருகின்றன.

எனினும் இந்திய மாறுபாடு தொற்று இலங்கையில் முதல் முறையாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் இருந்து திரும்பிய பயணி ஒருவர் இந்த தொற்றுக்கு ஆளாகி இருப்பதாகவும், அவர் கொழும்புவில் உள்ள தனிமைப்படுத்தல் மையத்தில் இருப்பதாகவும் இலங்கை ஸ்ரீஜெயவர்தனபுரா பல்கலைக்கழக நோய் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத்துறை தெரிவித்து உள்ளது. அவரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.


Next Story