லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்


லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
x
தினத்தந்தி 14 May 2021 1:08 AM GMT (Updated: 14 May 2021 1:08 AM GMT)

லெபனான் நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டது. இந்த தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்கபதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். 

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 116 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 109 பேரும், இஸ்ரேலில் 7 பேரும்( கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், லெபனானில் இருந்து அண்டை நாடான இஸ்ரேல் மீது நேற்று திடீரென ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வடக்கு பகுதியில் லெபனானுடன் எல்லையை பகிர்ந்துள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

மொத்தம் மூன்று ராக்கெட்டுகள் லெபனானில் இருந்து ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டுகள் இஸ்ரேலின் ஹலிலி நகரில் மத்திய தரைக்கடல் கரைப்பகுதியில் விழுந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.    

லெபனான் நாட்டில் ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேறி வருகிறது. தற்போது, காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையில் லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் முழுமையான போருக்கு வழிவகுக்கும் சூழ்நிலையை உருவாக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Next Story