இந்தியா உறுதியாக இருங்கள் - மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பல்கலை. கட்டிடம்
இந்தியா உறுதியாக இங்கள் என்ற வாசகத்துடன் மூவர்ணக்கொடி வண்ண விளக்குகளால் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலை கழக கட்டிடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
சிட்னி,
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 43 ஆயிரத்து 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,40,46,809 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2,62,317 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3,44,776 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,00,79,599 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 37,04,893 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில், கொரோனாவால் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இந்தியாவுக்கு உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகின்றன. மேலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவுடன் துணை நிற்பதாக உலகின் பல்வேறு நாடுகளும் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய நாட்டில் தலைநகர் சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா மீண்டு வர துணை நிற்பதாக தெரிவித்துள்ளது. அப்பல்கலைக்கழகத்தின் பிரதான நூலக கட்டிடத்தில் இந்திய தேசிய கொடியை பிரதிபளிக்கும் வகையில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த மின்விளக்கு பிரதிபளிப்பில் ‘இந்த பெருந்தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுவர இந்தியா உறுதியாக இருங்கள்’ என்று எழுதப்படுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் இந்திய மாணவர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story