சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்


சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல்
x
தினத்தந்தி 15 May 2021 12:31 AM GMT (Updated: 15 May 2021 12:31 AM GMT)

சிரியா நாட்டில் இருந்து இஸ்ரேல் மீது 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டது.

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. 

இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. பாலஸ்தீனத்தின் மற்றொரு பகுதியாக மேற்கு கரை உள்ளது. இப்பகுதியின் அதிபராக முகமது அப்பாஸ் செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையில், ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலையடுத்து காசா முனையில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

இந்த மோதலில் காசா முனையில் 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும் (கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) என மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். காசா மீதான தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டம் வன்முறையாக மாறியது. வன்முறையை கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படைனர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மேற்குகரையை சேர்ந்த பாலஸ்தீனர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், சிரியா நாட்டில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து நேற்று இரவு 3 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து ஏவப்பட்ட 3 ராக்கெட்டுகளில் 1 ஒன்று சிரியாவிலேயே விழுந்துவிட்டதாகவும், எஞ்சிய 2 ராக்கெட்டுகள் கோலன் ஹைட்ஸ் பகுதியில் உள்ள திறந்தவெளி இடத்தில் விழுந்ததாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

முன்னதாக, லெபனானில் இருந்து இஸ்ரேலுக்குள் போராட்டக்காரர்கள் சிலர் நுழைய முயற்சித்தனர். அந்த போராட்டக்காரர்களை தடுக்க இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சில நிமிடங்களில் சிரியாவில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், லெபனானில் இருந்து நேற்று இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

லெபனான், சிரியா ஆகிய நாடுகள் மற்றும் காசா முனை, மேற்குகரை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story