மியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி


மியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் பலி
x

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.

நைபிடா,

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது.  போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. 

ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மியான்மர் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மியான்மர் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜின் மாகாணத்தில் ஜின் லேண்ட் பாதுகாப்பு படை என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த கிளர்ச்சியாளர்கள் அமைப்பினர் ராணுவத்தினர் மீது அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ஜின் மாகாணத்தின் மிண்டட் நகரில் ஜின் லேண்ட் பாதுகாப்பு படை கிளர்ச்சியாளர்களுக்கும், மியான்மர் ராணுவத்தினருக்கும் இடையே நேற்று மோதல் ஏற்பட்டது. 

இந்த சண்டையில் கிளர்ச்சியாளர்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் கிளர்ச்சியாளர்கள் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 கிளர்ச்சியாளர்கள் படுகாயமடைந்தனர். மியான்மரின் பல்வேறு மாகாணங்களில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் மற்றும் தாக்குதல் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story