பாகிஸ்தான்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி


பாகிஸ்தான்: பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு - 7 பேர் பலி
x
தினத்தந்தி 21 May 2021 9:27 PM GMT (Updated: 21 May 2021 9:27 PM GMT)

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாகிஸ்தானில் நடைபெற்ற பேரணியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் உயிரிழந்தனர்.

காபுல்,

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு ஜெருசலேமின் அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த 10-ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

இதனை தொடர்ந்து காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி நூற்றுக்கணக்கான ராக்கெட் தாக்குதலை நடத்தினர்.

காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து மேற்குகரை பகுதியிலும் பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேல் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் உயிரிழந்தனர்.

11 நாட்களாக நடைபெற்றுவந்த இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான சண்டை நேற்று நிறுத்தப்பட்டது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சண்டை நிறுத்த ஒப்பந்தம் நேற்று செய்யப்பட்டுள்ளது. 

ஆனாலும், இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலில் 296 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் குழந்தைகள், பெண்கள் உள்பட 257 பேரும், மேற்கு கரை பகுதியில் 27 பேரும், இஸ்ரேலில் 12 பேரும்( கேரளாவை சேர்ந்த சௌமியா என்ற பெண் உள்பட) உயிரிழந்துள்ளனர். 

இதற்கிடையில், காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றது. பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த போராட்டங்கள், பேரணிகள் நடைபெற்றன.

அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணிகள் நடைபெற்றன. குறிப்பாக, அந்நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் ஷாமேன் என்ற நகரிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டனர். 

பேரணி போஹ்ரா சவுக் என்ற இடத்தில் உள்ள இறைச்சிக்கடை சந்தைபகுதி அருகே வந்தபோது அங்கு வெடிகுண்டுகளுடன் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடித்து சிதறியது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் பாலஸ்தீன ஆதரவு பேரணியில் கலந்துகொண்டவர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story