விமானம் இடைமறிக்கப்பட்ட விவகாரம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்


விமானம் இடைமறிக்கப்பட்ட விவகாரம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம்
x
தினத்தந்தி 25 May 2021 4:11 AM GMT (Updated: 25 May 2021 4:11 AM GMT)

விமானம் இடைமறிக்கப்பட்ட விவகாரத்தில் பெலாரஸ் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

பெலாரஸ் நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் லுகாசெங்கோ, தன்னை விமர்சிப்பவர்களை ஒடுக்கி வருகிறார். இதனால், பெரும்பாலான அரசியல் எதிரிகள் அந்நாட்டில் கைது செய்யப்பட்டு உள்ளனர், சிலர் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். அதுபோல், பெலாரஸ் நாட்டை சேர்ந்த ரோமன் புரோடாசெவிச் என்ற பத்திரிகையாளர், அதிபரை விமர்சனம் செய்து வருகிறார்.

அதிபரின் அத்துமீறல் அதிகரித்ததால், புரோடாசெவிச், லிதுவேனியா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்தபடி, அதிபர் தேர்தலில் உண்மையிலேயே வெற்றி பெற்றதாக கருதப்படும் எதிர்க்கட்சி தலைவருக்கு ஆதரவாக எழுதி வருகிறார்.

இந்தநிலையில், கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் நகரில், எதிர்க்கட்சி தலைவருடன் இணைந்து நிகழ்ச்சி ஒன்றில் ரோமன் புரோடாசெவிச் பங்கேற்றார். பின்னர், அவர் லிதுவேனியா தலைநகர் வில்னியசுக்கு திரும்புவதற்காக ரியான்ஏர் நிறுவன விமானத்தில் புறப்பட்டார். இதை அறிந்த பெலாரஸ், ரியான் ஏர் விமானத்தை நடு வானில் வழிமறித்து மின்ஸ்க் நகரில் தரையிறங்க வைத்தது.  

தொடர்ந்து,   பத்திரிகையாளர் ரோமன் புரோடாசெவிச்சை பெலாரஸ் போலீசார் கைது செய்தனர். அவருடன் வந்த பெண்ணும் கைது செய்யப்பட்டார். பயணிகள் விமானம் நடு வானில் போர் விமானம் மூலம் வழிமறித்து தரையிறக்கப்பட்ட்ட சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பெலாரஸ் நாட்டிற்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கவும் ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது.  ஐரோப்பிய யூனியன் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்து உள்ளது.

இதனிடையே, பயணிகள் விமானத்தை வழிமறித்த பெலாரஸ் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியங்களை தெரிவிக்குமாறு தனது ஆலோசகர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அதேபோல், பொருளாதார தடைகள் விதிக்கும் ஐரோப்பிய யூனியன் நடவடிக்கையையும் வரவேற்றுள்ளார். 

Next Story