அமெரிக்காவில் மோசடி வழக்கில் இந்தியருக்கு 3 ஆண்டு சிறை


அமெரிக்காவில் மோசடி வழக்கில் இந்தியருக்கு 3 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 28 May 2021 9:25 PM GMT (Updated: 28 May 2021 9:25 PM GMT)

அமெரிக்காவில் மோசடி வழக்கில் இந்தியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வசித்து வரும் இந்தியர் ஹிமான்சு அஸ்ரி (வயது‌ 34). இவர் டெல்லியில் கால் சென்டர் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் அந்த கால் சென்டர் மூலம் அமெரிக்கர்களை குறிவைத்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த பலரின் கம்ப்யூட்டர் திரையில் விளம்பரம் ஒன்றை தோன்ற வைத்து, அதில் உங்கள் கம்ப்யூட்டரில் பாதிப்பு உள்ளது. சரி செய்ய எங்களை அணுகுங்கள் என தனது கால் சென்டரின் தொலைபேசி எண்ணை வழங்கியுள்ளார். இதை நம்பி கால் சென்டரை தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் கம்ப்யூட்டரில் உள்ள பாதிப்பை சரி செய்ய பெரிய தொகையை வசூலித்து விட்டு, கம்ப்யூட்டரை சரி செய்து விட்டதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இப்படி அவர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.22 கோடி வரை மோசடி செய்துள்ளார். 

ஹிமான்சு அஸ்ரியால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அமெரிக்க நீதித் துறை நடத்திய விசாரணையில் அவரது சதி அம்பலமானது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஹிமான்சு அஸ்ரியை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிமான்சு அஸ்ரி தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நீதிபதி இந்த வழக்கில் தனது தீர்ப்பை வழங்கினார். அப்போது ஹிமான்சு அஸ்ரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து அவர் தீர்ப்பளித்தார்.

ஹிமான்சு அஸ்ரி தனது சிறை தண்டனையை முடித்த பின்னர் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story