அமெரிக்கா: புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு- 2 பேர் பலி, 25 பேர் காயம்


அமெரிக்கா: புளோரிடா மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு- 2 பேர் பலி, 25 பேர் காயம்
x
தினத்தந்தி 30 May 2021 11:42 AM GMT (Updated: 30 May 2021 11:49 AM GMT)

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் 3 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.

மியாமி,

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பெருகிவரும் துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிராக எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. துப்பாக்கி வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் அரசு தரப்பில் இதுவரை எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அந்த நாட்டை அதிர வைத்து வருகின்றன. 

இந்த நிலையில், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் தலைநகர் மியாமி நகரில் 3 பேர் கொண்ட கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். 25 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “ மியாமி நகரில்  நள்ளிரவில் இசைக்கச்சேரி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதிக்கு வந்த காரில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கி மூலம், அங்கு கூட்டமாக கூடியிருந்த மக்கள் மீது  கண்மூடித்தனமாக  தாக்குதல் நடத்தினர்.

இதனால், பீதி அடைந்த மக்கள் அபாயக்குரல் எழுப்பிக்கொண்டு அங்கும் இங்குமாக சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 25 பேர் காயம் அடைந்தனர். திட்டமிட்ட தாக்குதல் போல இது தெரிகிறது” என்றனர். மேலும், துப்பாக்கி சூடு  சம்பவம் குறித்தோ தாக்குதல் நடத்தியவர்கள் குறித்தோ தகவல் எதுவும் தெரிந்தால் அளிக்குமாறு மக்களுக்கு மியாமி நகர போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story