இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கேப் டவுன்,
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தொற்றின் 2வது அலை சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த 7 நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,515 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பதிவான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.65 மில்லியனாக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தென் ஆப்பிரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் 9,60,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தென் ஆப்பிரிக்காவில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் அதிபர் சிரில் ரமாஃபோசா தெரிவித்துள்ளார். இரவு 11 மணியில் இருந்து காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story