ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா... பைடன் சிக்குவாரா? அதிர்ச்சி தகவல் வெளியீடு


ஐரோப்பிய தலைவர்களை உளவு பார்த்த அமெரிக்கா... பைடன் சிக்குவாரா? அதிர்ச்சி தகவல் வெளியீடு
x
தினத்தந்தி 1 Jun 2021 4:51 AM GMT (Updated: 1 Jun 2021 4:50 AM GMT)

ஜெர்மன் அதிபர் மெர்கல் உள்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்த தகவல் வெளிவந்துள்ளது.

கோபன்ஹேகன்,

அமெரிக்காவின் நட்பு நாடுகளில் ஒன்றான டென்மார்க், இணையவசதிக்காக கடலுக்கு அடியில் பல இடங்களில் கேபிள்களை பதித்து பயன்படுத்தி வருகிறது.  இதன்வழியே சுவீடன், நார்வே, ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில், டென்மார்க் ராணுவ உளவு பிரிவு உள்நாட்டு புலனாய்வில் ஈடுபட்டது.  இதன் முடிவில், ஜெர்மனி நாட்டின் அதிபர் ஏஞ்சலா மெர்கல் உள்பட ஐரோப்பிய நாட்டு தலைவர்களை அமெரிக்கா உளவு பார்த்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகமை, டென்மார்க் கேபிள் வழியே உளவு அமைப்புடன் இணைந்து சுவீடன், நார்வே, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் மூத்த அரசு அதிகாரிகளை உளவு பார்த்துள்ளது.  கடந்த 2012ம் ஆண்டு முதல் 2014ம்  ஆண்டு வரையில் இது நடந்துள்ளது.

ஜெர்மனியின் அதிபர் தவிர, அந்நாட்டில் அப்போது வெளியுறவு துறை மந்திரியாக இருந்த பிராங்க்-வால்டர் ஸ்டீன்மெயர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் பீர் ஸ்டீன்பிரக் ஆகியோரையும் உளவு பார்த்திருக்கிறது.

டென்மார்க் இணையதள கேபிள்களில் இருந்து குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்டவை, சாட்கள் மற்றும் பிற செய்தி பகிர்வு சேவைகள் என எல்லாவற்றையும் இடைமறித்து விரிவான தரவுகளை அமெரிக்கா பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கில், அமெரிக்க அதிபராக தற்போதுள்ள ஜோ பைடன் முக்கிய குற்றவாளியென பைடன் துணை அதிபராக இருந்த காலகட்டத்திலேயே, எட்வர்டு ஸ்னோடென் என்ற சமூக ஆர்வலர் குரல் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.  ஸ்னோடென், தேசிய பாதுகாப்பு முகமையில் ஒப்பந்த அடிப்படையிலான பணியில் இருந்தவர்.


Next Story