டுவிட்டருக்கு தடை - நைஜீரிய அரசு அதிரடி


டுவிட்டருக்கு தடை - நைஜீரிய அரசு அதிரடி
x
தினத்தந்தி 4 Jun 2021 8:26 PM GMT (Updated: 4 Jun 2021 8:26 PM GMT)

நைஜீரிய அதிபர் பதிவிட்ட கருத்தை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

அபுஜா,

நைஜீரிய நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் முகமது புஹாரி. இதற்கிடையில், நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், சிவில் போர் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இதனை தொடர்ந்து, 1967-70 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி வன்முறையை தூண்டும் வகையில் அதிபர் முகமது தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். 

அதிபர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இன்று தவறான முறையில் நடந்து கொள்ளும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 30 மாதங்களாக எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள்’ என தெரிவித்தார். 

அவரது கருத்து போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்த தூண்டுவது போல அமைந்துள்ளது. இதனை தொடர்ந்து அதிபர் முகமதுவின் கருத்தை தங்கள் வலைதள பக்கத்தில் இருந்து டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இந்நிலையில், அதிபரின் டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் சமூகவலைதளமான டுவிட்டரை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் டுவிட்டர் செயல்பட காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதிபர் முகமது புஹாரி பதிவிட்ட டுவிட்டர் கருத்தை நீக்கியதால் ஆத்திரமடைந்த நைஜீரிய அரசு ஒட்டுமொத்தமாக டுவிட்டர் நிறுவனத்திற்கே நைஜீரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.   

Next Story