மியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி


மியான்மர்: ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி
x

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர்.

நைபிடா,

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரும் மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டம் ராணுவத்தின் அடக்குமுறையால் நசுக்கப்பட்டு வருகிறது.  போராட்டக்காரர்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட தாக்குதல்கள் இதுவரை 845-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், ராணுவ நடவடிக்கைகளுக்கு அஞ்சி 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மியான்மர் நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், ராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிராமங்களில் கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் உருவாகியுள்ளன. இந்த கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மியான்மர் ராணுவம் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் அயர்வாடி ரிவர் டெல்டா மாகாணத்தில் உள்ள ஹஸ்வீ என்ற கிராமத்தில் கிளர்ச்சியாளர் ஒருவரை கைது செய்ய மியான்மர் ராணுவத்தினர் நேற்று அந்த கிராமத்திற்கு சென்றனர். 

அப்போது, அந்த கிராம மக்கள் இணைந்து ராணுவத்தினர் மீது வில்,அம்பு ஏவி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக கிராம மக்கள் மீது ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மியான்மரி ராணுவம் தொடர்ந்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story