ஊரடங்கு தளர்வுகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை


ஊரடங்கு தளர்வுகள்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2021 4:54 PM GMT (Updated: 7 Jun 2021 4:54 PM GMT)

கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும் என்று டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் பரவி ஒன்றரை ஆண்டுகள் ஆகியுள்ள போதிலும் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து கொண்டு இருக்கிறது. தற்போது,  உருமாற்றம் அடைந்து மீண்டும் பல அலைகளாக கொரோனா தாக்கத்தொடங்கியுள்ளது. 

குறிப்பாக  இந்தியாவில் அதிகம் காணப்படும் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்டா வகை கொரோனா இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் பரவியுள்ளது. பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா பரவலும் உள்ளது. 

கொரோனா வைரஸ் பரவல் சற்று தணியத்தொடங்கியுள்ள நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இங்கிலாந்தில் ஜூன் 21 ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்த திட்டமிடப்பட்டு இருக்கும் நிலையில், உருமாறிய கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் கட்டுப்பாடுகளை தளர்த்துவதா? வேண்டாமா? என்பது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை சற்று தணியத்தொடங்கியிருக்கும் நிலையில், மாநிலங்களில் கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் கூறியதாவது:-

டெல்டா வகை கொரோனா உள்பட கவலை அளிக்க கூடிய வகையிலான புதிய வகை கொரோனா பரவல் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், கட்டுப்பாடுகளை விரைவாக தளர்த்துவது தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு பெரும் ஆபத்தாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story