கொரோனாவை பரப்பியதாக 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு கேட்ட டிரம்ப்: சீனா பதிலடி


கொரோனாவை பரப்பியதாக 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு கேட்ட டிரம்ப்: சீனா பதிலடி
x
தினத்தந்தி 7 Jun 2021 5:27 PM GMT (Updated: 7 Jun 2021 5:49 PM GMT)

கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் சீனா கொடுக்க வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.

பெய்ஜிங்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவானதாகக் கருதப்படும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கூட இன்னமும் எட்டாத நிலையில், அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த படாதபாடு பட்டன.

உலக அளவில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த நாடு அமெரிக்காதான். அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடிய சமயத்தில் அதிபராக இருந்த டிரம்ப், சீனா மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.  ‘சைனீஸ் வைரஸ்’ என்று அப்போது வர்ணித்தார். இது கடும் சர்ச்சைக்குள்ளானது. 

இந்த நிலையில், சமீப காலமாக கொரோனா வைரஸ் சீனாவின் உகான் ஆய்வகத்தில் இருந்துதான் வெளிப்பட்டதாக மேற்கத்திய நாட்டு ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. 
 இதனைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீண்டும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தத் தொடங்கியுள்ளார்.  டிரம்ப் கூறுகையில்  

சீனா வைரஸ் உகான்  ஆய்வகத்தில் வெளியே கசிந்தது என்று நான் கூறியபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலர் என்னை கடுமையாக விமர்சித்தனர். அமெரிக்காவில் கூட எனது வாதத்திற்கு எதிர் வாதங்கள் வைக்கப்பட்டன. ஆனால் நான் கூறிய குற்றச்சாட்டு உண்மை தான் என்பதை நிருபிக்கும் ஆதாரங்கள் வந்த வண்ணம் உள்ளன சீனாதான் காரணம் என்பதை தற்போது அனைவரும் உணரத் தொடங்கி விட்டனர்.

சீனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பலத்த சேதத்துக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இதற்காக சீனா 10 ட்ரில்லியன் டாலர்கள் அபராதம் செலுத்த வேண்டும். அமெரிக்கா மற்றும் கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நாடுகளுக்கும் நஷ்ட ஈடாக 10 ட்ரில்லியன் டாலர்கள் சீனா கொடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். 

சீனா பதிலடி 

இந்த நிலையில், இவ்விவகாரம் குறித்து பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்  கூறியிருப்பதாவது:  டிரம்ப் மீண்டும் மீண்டும் உண்மைகளை புறந்தள்ளுகிறார். பெருந்தொற்றை கையாள்வதில் தனக்கு இருந்த பொறுப்பை தட்டிக்கழிப்பதோடு மக்களின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறார்.  மக்களின் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் புறக்கணித்த பாசாங்குத்தனாமான அரசியல்வாதிகளையே பொறுப்பாக்க வேண்டும்”என்றார்.


Next Story