ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் தொழிலாளர்கள் 10 பேர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் அட்டூழியம்


ஆப்கானிஸ்தானில் கண்ணிவெடிகளை அகற்றும் தொழிலாளர்கள் 10 பேர் சுட்டுக்கொலை பயங்கரவாதிகள் அட்டூழியம்
x
தினத்தந்தி 10 Jun 2021 4:16 AM GMT (Updated: 10 Jun 2021 4:16 AM GMT)

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே 20 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.‌

காபூல்,

 நாடு முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் தலீபான் பயங்கரவாதிகள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை கொலை செய்யும் நோக்கில் அவர்கள் செல்லும் வழியில் கண்ணி வெடிகளை புதைத்து வைக்கின்றனர். ஆனால் பெரும்பாலும் அப்பாவி மக்களே இந்த கண்ணி வெடிகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.

இதனால் ஆப்கானிஸ்தானில் பல தொண்டு நிறுவனங்கள் வெடிக்காத கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் ஹாலோ என்கிற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வடக்கு மாகாணமான பாக்லானில் முகாமிட்டு கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹாலோ தொண்டு நிறுவன தொழிலாளர்கள் நாள் முழுவதும் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு விட்டு இரவில் முகாமில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களது முகாமுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த பயங்கரவாதிகள் தூங்கிக்கொண்டிருந்த தொழிலாளர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.‌ அதேசமயம் தலீபான் பயங்கரவாதிகளே இந்த தாக்குதலை நடத்தியதாக ஹாலோ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story