பாகிஸ்தான்: போலியோ சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி


பாகிஸ்தான்: போலியோ சொட்டு மருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது துப்பாக்கிச்சூடு - 2 பேர் பலி
x
தினத்தந்தி 10 Jun 2021 7:21 AM GMT (Updated: 10 Jun 2021 7:21 AM GMT)

பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து போடும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு சென்ற போலீசார் மீது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.

லாகூர்,

உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் மட்டும் தான் இன்னும் போலியோ நோய் உள்ளது. இளம்பிள்ளைவாதம் என்னும் இந்நோய் குழந்தைகளை தாக்கி நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயை தடுக்க போலியோ சொட்டுமருந்து குழந்தைகளுக்கு செலுத்தப்படுகிறது.

இதற்கிடையில், பாகிஸ்தானில் கடந்த ஆம் ஆண்டு 84 குழந்தைகளுக்கு போலியோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 1 குழந்தைக்கு போலியோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் இந்த ஆண்டே போலியோவை ஒழிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது.

ஆனால், போலியோ சொட்டுமருத்து முகாம்களை நடத்த அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்புகள் நிலவி வருகிறது. கல்வியறிவு இன்மை மற்றும் பிறகாரணங்களால் இந்த எதிர்ப்பு நிலவி வருகிறது. 

குறிப்பாக, போலியோ என்பது மேற்கத்திய நாடுகளால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதை எனவும், அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லெடன் அமெரிக்கப்படைகளால் கொல்லப்படுவதற்கு பின்லேடன் தொடர்பான தகவல்களை சேகரிக்க அவன் தங்கி இருந்த பகுதிகளில் பொய்யாக போலியோ தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றதாகவும் பாகிஸ்தானில் உள்ள அடிப்படைவாதிகள் கருதிகின்றனர். 

இதனால், போலியோ முகாம்கள் நடக்கவிடாமல் தடுத்து வருகின்றனர். மேலும், போலியோ சொட்டுமருத்து போட வரும் மருத்துவ ஊழியர்கள் மீதும் சில அமைப்பினர் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், போலியோ முகாம்கள் நடத்தப்படும்போது மருத்துவ ஊழியர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள மர்டன் மாவட்டத்தில் நேற்று போலியோ சொட்டுமருத்து முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சொட்டுமருந்து முகாம் முடிவடைந்தபின்னர் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தங்கள் பணியை முடித்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கு செல்ல முற்பட்டனர்.

அப்போது, அங்கு துப்பாக்கியுடன் வந்த ஒருநபர் போலீசார் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். அந்த நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போலியோ சொட்டுமருத்து முகாமிற்கு பாதுகாப்பு பணிக்கு வந்த 2 போலீசாரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சக போலீசாரை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.    

Next Story