கொரோனா தடுப்பூசி: 23 ஆப்பிரிக்க நாடுகளில் 50% டோஸ்களே பயன்படுத்திய அவலம்


கொரோனா தடுப்பூசி:  23 ஆப்பிரிக்க நாடுகளில் 50% டோஸ்களே பயன்படுத்திய அவலம்
x

கொரோனா தடுப்பூசி கிடைத்தும் அவற்றில் 50% டோஸ்களே 23 ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்ட அவலநிலை காணப்படுகிறது.

ஜெனீவா,

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகளால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  இவற்றில் ஆப்பிரிக்க நாடுகளும் அடங்கும்.  எனினும், கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டும் அவை அந்நாடுகளுக்கு சரியாக சென்று பயனடையாத நிலை காணப்படுகிறது.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்காவுக்கான மண்டல இயக்குனர் மத்ஷிதிசோ மோதி கூறும்பொழுது, ஆப்பிரிக்காவில் 1.2 கோடி பேருக்கு முழு அளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.  இது ஆப்பிரிக்க மக்கள் தொகையில் 1% அளவுக்கும் குறைவாகும் என கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவில் 50 லட்சம் பேருக்கு பாதிப்புகளும், 1.36 லட்சம் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன.  22 ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை கொரோனாவால் வாராவாரம் பாதிப்புகள் 20% அளவுக்கு அதிகரித்து வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை முன்பில்லாதது போல் திடீரென உயர்ந்து சுகாதார கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படுத்தியதுபோல் ஆப்பிரிக்காவில் 3வது அலை ஏற்பட கூடிய சூழல் உள்ளது.

கடந்த வாரத்தில் 50 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.  எனினும், கொரோனா தடுப்பூசி கிடைத்தும் அவற்றில் 50% டோஸ்களே 23 ஆப்பிரிக்க நாடுகளில் பயன்படுத்தப்பட்ட அவலநிலை காணப்படுகிறது.  சரியான தளவாட வசதிகள், நிதியுதவி மற்றும் கொரோனா தடுப்பூசிகளை போட்டு கொள்வதில் மக்களின் தயக்கம் ஆகியவற்றால் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story