அமெரிக்க பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வீழ்ச்சி


அமெரிக்க பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வீழ்ச்சி
x
தினத்தந்தி 18 Jun 2021 4:01 PM GMT (Updated: 18 Jun 2021 4:01 PM GMT)

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கடந்த ஆண்டு வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை 43 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 2019 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்திற்கு இடையிலான காலத்தில் நடைபெறும் வெளிநாட்டு மாணவர்களுக்கான சேர்க்கை 16 சதவீதம் குறைந்துள்ளது. அதுவே 2020 ஆம் ஆண்டில் 43 சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

உலக அளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. எனவே சுகாதார காரணங்ளால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

அதே சமயம் அமெரிக்காவில் சமீப காலமாக ஆசியர்களுக்கு எதிராக அதிகரித்து வரும் இனவெறி தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் பலர் விண்ணப்பிக்காமல் இருப்பதற்கு காரணமாக உள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் சீனாவிற்கு எதிரான போக்கும் இதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துள்ளது என கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அட்லாண்டாவில் 6 பெண்களின் படுகொலை உள்பட அமெரிக்காவில் ஆசியர்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள் ஆசிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இனவெறி தாக்குதல்கள் நடைபெற்று வந்தாலும், பல ஆசிய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்கவே விரும்புகின்றனர். அதே சமயம் கல்விக்காக அதிக கட்டணத்தை செலுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியாகவும் அவர்கள் பங்களிக்கின்றனர்.

இத்தகைய சூழலில் வெளிநாட்டு மாணவர்கள், தாங்கள் வரவேற்கப்படாததைப் போல உணர்ந்தால், மேற்கத்திய நாடுகள் தங்கள் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். இதை சரி செய்யத் தவறினால், அதனால் பல்கலைக்கழங்கள் மட்டுமல்லாது முழு பொருளாதாரமும் பாதிக்கப்படும் என்பதே பொருளாதார வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.

Next Story