ஏமனில் ராணுவ தளம் மீது ஆளில்லா விமான தாக்குதல் 4 வீரர்கள் பலி
அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
ஏடன்,
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி சவுதி கூட்டுப்படைகளின் ராணுவ வீரர்கள் ஏமனில் முகாமிட்டு ஏமன் ராணுவத்தில் புதிதாக சேரும் வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் ஏமனின் தென்கிழக்கு பகுதியில் ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய ராணுவ தளம் ஒன்று, புதிய ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த ராணுவ தளம் சவுதி கூட்டுப்படைகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை ஹட்ரமவுட் மாகாணத்தில் உள்ள இந்த ராணுவ தளத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஏமன் ராணுவத்தில் புதிதாக சேர்ந்த 4 வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்தனர்.
Related Tags :
Next Story