முதலில் அஸ்ட்ரா ஜெனேகா, 2-வது மாடர்னா: 2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பெண் பிரதமர்


முதலில் அஸ்ட்ரா ஜெனேகா, 2-வது மாடர்னா: 2 வெவ்வேறு தடுப்பூசி போட்ட ஜெர்மனி பெண் பிரதமர்
x
தினத்தந்தி 24 Jun 2021 12:44 AM GMT (Updated: 24 Jun 2021 12:44 AM GMT)

முதலில் அஸ்ட்ரா ஜெனேகா, 2-வது மாடர்னா என்ற 2 வெவ்வேறு தடுப்பூசிகளை ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் செலுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்து உள்ளார்.

பெர்லின்,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்துள்ளன. எந்தவொரு தடுப்பூசியையும் ஒருவர் போட்டுக்கொள்கிறபோது, குறிப்பிட்ட கால இடைவெளியில் அதே தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதைத் தான் அனைவரும் பின்பற்றுகின்றனர்.

அதே நேரத்தில் முதலில் ஒரு டோஸ் தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் வேறொரு தடுப்பூசியையும் போடுகிறபோது, என்ன ஆகும் என்பது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. இதுபற்றியும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர்.

இந்த தருணத்தில் உலகின் செல்வாக்கு மிகுந்த தலைவர்களில் ஒருவரான ஜெர்மனி பெண் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் (வயது 66) இரு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு கவனத்தை ஈர்த்து உள்ளார்.

இவர் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் டோஸ் தடுப்பூசியாக செலுத்திக்கொண்டார். (இந்தியாவில் இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரித்து வழங்கப்படுகிறது.)

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த ஜெர்மனி அதிகாரிகள் பரிந்துரை செய்த நிலையில்தான் அவர் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

தற்போது அவர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார். இதை அவரது செய்தி தொடர்பாளர் நேற்று முன்தினம் உறுதிப்படுத்தினார்.

இத்தாலி பிரதமர் மரியோ டிராகியும் (73) முதலில் ஒரு கொரோனா தடுப்பூசியையும், இரண்டாவது மற்றொரு தடுப்பூசியையும் போடுவதை ஆதரிக்கிறார். இவரும் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் போலவே முதலில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை செலுத்தி இருந்தார்.

இந்த நிலையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியாக இவர் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியை போட்டுக்கொண்டுள்ளார் என்று இத்தாலியின் ‘கோரியேர் டெல்லா செரா’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசியை முதலிலும், 2-வது டோசாக பைசர் தடுப்பூசியையும் போட்டுக்கொள்கிறபோது அது பெரியவர்களிடம் லேசான அல்லது மிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சில நாடுகள் குறிப்பிட்ட தடுப்பூசியின் வினியோக பிரச்சினைகள் காரணமாக இரு வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டு, கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு மேம்படுவதை கவனித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story