காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்தாக்குதல்


காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்தாக்குதல்
x
தினத்தந்தி 2 July 2021 5:47 PM GMT (Updated: 2 July 2021 5:47 PM GMT)

ஜெருசலேம் நகரம் யாருக்கு சொந்தம் என்பதில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நீடிக்கும் சூழலில், இந்த விவகாரம் தொடர்பாக பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகிக்கும் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த மே மாதம் 10-ந் தேதி பயங்கர மோதல் வெடித்தது.

இரு தரப்புக்கும் இடையில் 11 நாட்களாக இடைவிடாமல் நீடித்த இந்த சண்டையில் 250-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 3 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்தனர். சர்வதேச சமூகத்தின் தொடர் அழுத்தத்துக்கு பின்னர் மே மாதம் 21-ந் தேதி இரு தரப்பும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. இந்த நிலையில் ஹமாஸ் போராளிகள் காசா நகரில் இருந்து இஸ்ரேல் நாட்டின் தெற்குப் பகுதியை குறிவைத்து வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட பலூன்களை பறக்க விட்டனர்.இந்த பலூன்கள் விழுந்து வெடித்து சிதறியதில் பல இடங்களில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஹமாஸ் போராளிகளின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா நகர் மீது மீண்டும் வான் வழி தாக்குதலை நடத்தியது. அங்கு ஹமாஸ் போராளிகளின் ஆயுத உற்பத்தி தளத்தைக் குறிவைத்து போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. எனினும் இந்த வான் தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றி இஸ்ரேல் ராணுவம் குறிப்பிடவில்லை. சண்டை நிறுத்தத்துக்கு பிறகு காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் இப்படி வான்வழி தாக்குதல் நடத்துவது இது 3-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story