டெல்டா வகை கொரோனாவால் நாட்டில் 5-அவது அலை ஏற்பட வாய்ப்பு: ஈரான் அதிபர் அச்சம்


Photo Credit: AFP
x
Photo Credit: AFP
தினத்தந்தி 3 July 2021 9:21 AM GMT (Updated: 3 July 2021 9:21 AM GMT)

ஈரானில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரான்,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. தொற்று பரவி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டாலும் வைரசின் ஆட்டம்  அடங்கவில்லை. உருமாற்றம் அடைந்து பல அலைகளாக  தாக்கத்தொடங்கியுள்ளதால், தற்போதும் வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகமாக உள்ளது. 

இதனால், பல நாடுகள்  ஊரடங்கு கட்டுப்படுகளை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. இதற்கிடையில், டெல்டா வகை கொரோனா தற்போது உலக அளவில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. வேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த வகை கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடான ஈரானிலும் டெல்டா வகை கொரோனா பரவியுள்ளது. நாட்டின் தென் மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா பரவியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஈரானின் வைரஸ் எதிர்ப்பு பணிக்குழுவினருடன் ஆலோசனை நடத்திய அதிபர் ஹசன் ரவுகானி,  டெல்டா வகை கொரோனா பரவலால் நாட்டில்  கொரோனா ஐந்தாவது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நாடு முழுவதும் கொரோனா ஐந்தாவது அலையை நோக்கி நாம் செல்கிறோம். ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்றார். 

அணு சக்தி ஒப்பந்த மோதல் விவகாரத்தில் அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளதால், ஈரானில் தடுப்பூசியை இறக்குமதி செய்யும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசி போட நீண்ட காலம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. 

ஈரானில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஈரானில் இதுவரை 44 லட்சம் பேருக்கு  ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை 17 லட்சம் மட்டுமே ஆகும். ஈரான் நாட்டு மக்கள் 8.29 கோடி என்பது கவனிக்கத்தக்கது.

Next Story