நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பள்ளி மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில் பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கி முனையில் பள்ளி மாணவர்களை சிலர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபுஜா,
நைஜீரியா நாட்டில் கட்டுனா என்ற மாகாணத்தில் உள்ள பெத்தேல் பாப்டிஸ்ட் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்க வந்த மாணவர்களை அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று துப்பாக்கி முனையில் கடத்தி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்தவுடன் மாணவர்களின் பெற்றோர் பள்ளியின் முன்பு குவிந்தனர்.
கடத்தப்பட்டவர்களில் இதுவரை ஒரு பெண் ஆசிரியர் உள்பட 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் 150 பள்ளிக்குழந்தைகள் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள 12 பகுதிகளுக்கு காலவறையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு நைஜீரியாவில் இதுபோல் பள்ளி மாணவர்களை பணயத்தொகைக்காக கடத்தி பின்னர் விடுதலை செய்யும் சம்பவங்கள் கடந்த சில காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து அங்கு சுமார் ஆயிரம் பேர் வரை கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story